ரேஷன் அரிசி கடத்தியவர் கைது; வேன் பறிமுதல்
ஈரோடு, சிங்கம்பேட்டையில், ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார். வேன் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் எஸ்.ஐ., மேனகா, ஈரோடு பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் போலீசார், அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவ்வழியே வந்த மாருதி ஆம்னியை சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி மூட்டை இருந்தது கண்டுபிடிக்கபட்டது. காரை ஓட்டியவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பவானி நேதாஜி நகரை சேர்ந்த சக்திவேல், 36, என்பதும், குருவரெட்டியூர், பூதப்பாடி, பூனாச்சி பகுதிகளில் வசித்து வரும் மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரிந்தது. அவரது வீட்டில் இருந்து, 900 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொத்தம் ஒன்றே முக்கால் டன் ரேஷன் அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். பின், நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு கிளை சிறையில் சக்திவேல் அடைக்கப்பட்டார்.