நாய்கள் கடித்து கடமான் பலி
மேட்டூர்,ஈரோடு, சென்னம்பட்டி வனச்சரகம், வடபர்கூர் காப்புக்காட்டில் கடமான்கள், புள்ளிமான்கள், யானைகள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் இருந்து, 4 வயது ஆண் கடமான் வழி தவறி, மேட்டூர் வனச்சரகம், கொளத்துார் காப்புகாடு, ஏழுபரணை காடு கிராமத்தில் புகுந்தது. மானை கண்ட நாய்கள் விரட்டின. அதில் மிரண்டு ஓடிய மானை, சில நாய்கள் கடித்ததால் காயம் அடைந்து விழுந்து உயிருக்கு போராடியது. கொளத்துார் வனவர் ராஜேஷ் உள்ளிட்ட வன ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று முதலுதவி அளித்து, மானை வனப்பகுதியில் விட்டனர். எனினும் காயம் அடைந்த மான் உயிரிழந்தது. நேற்று காலை கொளத்துார் சோதனை சாவடி அருகே, கடமான், குழி தோண்டி புதைக்கப்பட்டது.