கோழிப்பண்ணை விவகாரத்தில் 3வது முறையாக பேச்சுவார்த்தை
தாராபுரம், :தாராபுரம் அருகே, கோழிப்பண்ணையால் ஏற்படும் சுகாதாரக்கேடு தொடர்பாக, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையத்தில் இயங்கும் கோழிப்பண்ணையால், சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால் கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே தாசில்தார் முன்னிலையில், இருமுறை பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தாசில்தார் திரவியம் தலைமையில் மூன்றாவது முறையாக, முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மாலை நடந்தது. இதில் கோழி பண்ணை நிர்வாகம், பொதுமக்கள் தரப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் வரும், 13ம் தேதி, இறுதியாக பேசி முடிவு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.