கிறிஸ்துமஸ் கொண்டாட தடை கூடாது எனக்கூறி மனு
ஈரோடு, டிச. 24-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சி.எஸ்.ஐ., பிரப் நினைவு சர்ச் சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் கூறியதாவது:ஈரோடு மாவட்டம் பெத்தாம்பாளையம், பொன்னாண்டான்வலசு அண்ணா நகரில், ஈரோடு பிரப் நினைவாலயத்தின் சார்பில், 2010 டிச.,24ல் சிற்றாலயம் கட்டி, மங்கல படைப்பு செய்யப்பட்டது. அப்பகுதியில், 40 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள். அதில், 38 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறி ஆலயத்தில், 14 ஆண்டாக வழிபட்டு வருகின்றனர். கடந்தாண்டு கிறிஸ்துமஸ் ஆராதனை நடத்தக்கூடாது என சிலர் தலையிட்டதால், ஆராதனை நடத்த முடியாமல் போனது. இந்தாண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புதிய வருட ஆராதனையை நடத்தக்கூடாது எனக்கூறி, பெருந்துறை தாசில்தார் கடிதம் கொடுத்துள்ளார். நாங்கள் வழக்கம்போல, ஆராதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும். தடை விதிக்கக்கூடாது. இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.