பிரசவத்துக்கு பின் பெண் இறப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல்
கோபி: பிரசவத்துக்கு பின் பெண் இறந்ததால், அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், கோபி அருகே நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே, சுண்டப்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி மைதிலி, 28. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான மைதிலி, பிரசவத்துக்காக கடந்த வாரம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த பின், மைதிலிக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைதிலி, நேற்று மதியம் இறந்தார். இதனால் அவரின் உறவினர்கள், கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் நேற்றிரவு, 7:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், 'முதல் குழந்தை சுகப்பிரசவம் மூலம் பிறந்தது. ஆனால் இரண்டாவது குழந்தையின் பிரசவத்துக்கு, மைதிலியின் கணவர் கையெழுத்தில்லாமல், அறுவை சிகிச்சை செய்துள்ளனர். யாரிடமும் சொல்லாமல் எதற்காக கோவைக்கு அழைத்து சென்றனர். மைதிலியின் உயிர் எப்படி பிரிந்தது என மர்மமாக உள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என்றனர்.கோபி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.