காணாமல் போய் மீட்கப்பட்டமாணவியருக்கு எஸ்.பி., அறிவுரை
ஈரோடு:பவானியை சேர்ந்த முருகன், அமுதா தம்பதியரின், 15 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார்.பவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இம்மாணவி, சக மாணவியர் என,5 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துவிட்டு, வீட்டுக்கு செல்லாமல் பஸ் ஏறி சென்றுள்ளனர்.வீட்டுக்கு மாணவியர் வராததால், அவர்களது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பவானி போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். இம்மாணவியர், பஸ் ஏறி சென்றதை பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விசாரித்தனர்.கடந்த, 16ல் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே, 5 பேரையும் போலீசார் மீட்டு, பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.மாணவியர், அவர்களது பெற்றோரை அழைத்து வந்து, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் வைத்து எஸ்.பி., சுஜாதா அறிவுரை கூறினார். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, படிப்பின் அவசியம், பெற்றோர்களின் பரிதவிப்பு உள்ளிட்டவைகளை விளக்கி, படிப்பை தொடர அறிவுரை கூறினார்.அத்துடன், மாயமான குறைந்த நேரத்தில் மாணவியரை மீட்ட போலீசாரையும் எஸ்.பி., பாராட்டினார்.