விவசாயிக்கு வியாதி வராது
கோபி:பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தியும், பயிர் கடனை தள்ளுபடி செய்யக்கோரி, பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் கோபியில் நேற்று நடந்தது. இதில் ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.இதில் பேசிய ஒரு விவசாயி, 'விவசாயத்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும். விவசாயம் செய்தால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வராது. விவசாயம் செய்தால்தான் முக்கியமான திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். தங்களின் மகன்களை விவசாய பணியில் விவசாயிகள் ஈடுபடுத்த வேண்டும். வெளிநாடுகளில் படிக்கும் மகன், விவசாயி இறந்தால், அவர் வரும் வரை, உடலை பிரீசர் பாக்சில் வைத்திருக்க வேண்டியுள்ளது. விவசாயம் செய்தால் உரிமையாக உடலுக்கு கொல்லி வைக்க முடியும். விவசாயம் மோசமான தொழில் இல்லை. முறையாக தண்ணீர் இருந்தால் சிறப்பாக செய்ய முடியும்' என்று பேசி, கைதட்டலை அள்ளினார்.