குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனம் மீது நடவடிக்கை: கலெக்டர் கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொழிலாளர் நலத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் தமிழில் பெயர் பலகை வைத்தல் தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செங்கல் சூளைகளில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். அனைத்து கடைகள், உணவு நிறுவனங்களில் தமிழில் பெயர்பலகை வைப்பது தொடர்பாக வணிகர் சங்க பிரதிநிதிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களை வலை தளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குழந்தை தொழிலாளர்கள் இருப்பது கண்டறிப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் குழந்தையை மீட்டு குழந்தை நலக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் கொத்தடிமை தொழிலாளர் முறை குறித்த புகார்களை, 1900 4252 650 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.