நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.கலந்து கொண்ட மாணவ, மாணவியர் நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அறிவோம் ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை', 'நமது பணம் நமது உரிமை', 'அறிவோம் தேர்வு செய்யும் உரிமை', 'அறிந்திரு விழித்திரு செயல்படு', 'போலியான நிறுவனம் தவிர்', 'நுகர்வோரின் உரிமைக்கு உத்திரவாதம் நுகர்வோர் சட்டம்' என்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊர்வலம் பஸ் நிலையம் வழியாக கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.