வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் தலைமையில் ஆய்வு கலெக்டர் அட்வைஸ்
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது. துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் விவரம், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், துறை வாரியான வளர்ச்சித் திட்டங்கள், முடிவுற்ற திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள், சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கேட்டறிந்து ஆய்வு நடந்தது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். துறைவாரியான செயல்பாடுகளை தொடர்ந்து முறையாக மேற்கொண்டு, ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கி அலுவலர்கள் செயல்பட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.