எலக்ட்ரிக் ஆட்டோவால் பாதிக்கப்பட்டவர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தன்னை ஏமாற்றிய எலக்ட்ரிக் ஆட்டோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட நபர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன், 35; கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில்; மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கள்ளக்குறிச்சியில் அப்காட் இவி நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோ வாங்கினேன். வாங்கிய சில நாட்களில் ஆட்டோவில் பழுது ஏற்பட்டது. இது குறித்து ஆட்டோ ஷோரூமில் கேட்டபோது உரிய பதிலளிக்கவில்லை. இதனால் விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆட்டோ நிறுவனம் நஷ்ட ஈடாக 1 லட்சம் மற்றும் வழக்கு செலவுக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், ஆட்டோ நிறுவனம் நஷ்ட ஈடு வழங்கவில்லை. இந்நிலையில், ஆட்டோ வாங்குவதற்காக கடன் வழங்கிய வங்கி மாத தவணை செலுத்தக்கோரி நெருக்கடி தருகின்றனர். எலக்ட்ரிக் ஆட்டோவால் எந்த பயனும் இல்லாததால் மாத தவணை செலுத்த முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வந்த ஆட்டோ சப் டீலர் ஷோரூமும் மூடப்பட்டு விட்டது. எனவே என்னை ஏமாற்றிய எலக்ட்ரிக் ஆட்டோ ஷோரூம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.