மாற்று இடம் வழங்கக் கோரி வீடு இழந்தவர்கள் சாலை மறியல்
திருக்கோவிலுார் : மேமாளூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதையடுத்து மாற்று இடம் வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் மறியலில் ஈடுபட்டனர். திருக்கோவிலுார் அடுத்த மேமாளூர் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்ட 144 வீடுகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று இடம் வழங்கி, வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு திருக்கோவிலுார் - திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 12:00 மணிக்கு கலைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 150 பேர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.