மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் : கலெக்டர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் நடந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமினை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். தியாகதுருகம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தினர். இதில் 65க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் இருந்து 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் 65க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். மேலும் இக்குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகாமை ஆய்வு செய்த கலெக்டர் பிரசாந்த் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இம்முகாமில் சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் அந்தோணிராஜ், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.