வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. வடகிழக்கு பருவமழை கடந்த 15ம் தேதி துவங்கியது. அன்று முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ததில், வீடு இடிந்து மூதாட்டி ஒருவர் பலியனார். 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலரான மாநில தேர்தல் ஆணைய செயலாளர் வெங்கடபிரியா தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு, கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள், பாதுகாப்பு முகாம்கள், பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள், அவசர கால பணியாளர்கள், கடந்த ஆண்டுகளில் பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள், கோமுகி மற்றும் மணிமுக்தா அணையின் கொள்ளளவு, நீர் இருப்பு குறித்து ஆலோசனை நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வெங்கடபிரியா கூறியதாவது; வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும், கால்வாய் அடைப்புகளை சரிசெய்து, ஏரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைத்து கண்காணிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என கூறினார். கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, திருக்கோவிலுார் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.