கடன் திருவிழாவில் 55 பேருக்கு ரூ.6.03 கோடிக்கு ஆணை வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் திருமண மண்டபத்தில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கடன் திருவிழா நடந்தது. நிகழ்ச்சியை துவக்கிய கலெக்டர் பிரசாந்த், 55 பயனாளிகளுக்கு ரூ.6.03 கோடி மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசுத் துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து அலுவலர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும், மாவட்டத்தில் தொழிற்கடன், விவசாயக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகனக்கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு கடன்கள், வட்டி விகிதங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு மானியத்துடன் தொழில் துவங்கிட அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தொழில் மையம் மூலம் அரங்கு அமைக்கப்பட்டது. மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு திட்டங்களின் கையேடு வழங்கப் பட்டு, திட்ட விவரங்கள், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப் பட்டது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், அரசு அலுவலர்கள், சம்மந்தப்பட்ட வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.