சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கை : கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி : அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலை பாதுகாப்பு பணிகள் மற்றும் சீரான போக்குவரத்து தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள், சீரான போக்குவரத்து குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் முக்கிய நகர பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் வாகன சுரங்கபாதைகள் அமைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அவ்விடங்களில் உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட சம்மந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எஸ்.பி., மாதவன், டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி உடப்ட போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.