சாலையில் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி
கள்ளக்குறிச்சி: வாகன போக்குவரத்து மிகுந்த நீலமங்கலம் - கூத்தக்குடி சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் - கூத்தக்குடி சாலை வழியாக தினமும் ஏராளமானோர் செல்கின்றனர். நீலமங்கலம் நரிக்குறவர் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சில நாட்களாக சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகளவில் செல்லும் சாலையில் குட்டைபோல் கழிவு நீர் தேங்கி வழிந்தோடுகிறது.சில நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்கள் சாலையோரம் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது கழிவு நீரை வாரி இறைத்தாவறு செல்கிறது.இதனால், பொதுமக்கள் மற்றம் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே சாலையில், கழிவு நீர் வழிந்தோடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.