கல்வராயன்மலைவாழ் மக்கள் 1,112 பேருக்கு வன உரிமை சான்றிதழ் வழங்க நடவடிக்கை
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் தனி நபர் வன உரிமை சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்த 1,112 பேருக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தனிநபர் வன உரிமை சான்று வழங்குவது தெடர்பான மாவட்ட அளவிலான வன உரிமைக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கல்வராயன்மலை பழங்குடியின மக்கள், காடு புறம்போக்கு எனும் அரசு புறம்போக்கு நிலங்களில் விவசாய நிலங்களாக பயன்படுத்தி வரும் இடங்களுக்கு தனிநபர் வன உரிமைச் சான்று வழங்குவது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், 1,112 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, அனைவருக்கும் வன உரிமைச் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தவும், குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டும். மேலும் வன உரிமை சான்றிதழ் கோரி விண்ணப்பித்த நபர்களின் விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்.டி.ஓ., முருகன், தனி தாசில்தார் கமலக்கண்ணன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.