குறுந்தானியங்கள் சாகுபடிக்கு மலைவாழ் மக்களுக்கு மானியம்
சங்கராபுரம்: மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டத்தின் கீழ் குறுந்தானியங்கள் சாகுபடி செய்யும் மலைவாழ் மக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கல்வராயன்மலை வட்டாரத்தில் குறுந்தானியம் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வராயன்மலை வட்டாரத்தில் பழங்குடியினர் விவசாயிகளால் ஊட்டசத்து மிகுந்த கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களும், சாமை, தினை, வரகு போன்ற குறுந்தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறுந்தானியங்கள் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் மலைவாழ் மக்களுக்காக உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் குறுந்தானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1600 ரூபாய் மானியம், வரகு, சிறுதளைகள் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தை மலைவாழ் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் உள்ளது.