உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்

விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த பஸ் நிலையம்

கள்ளக்குறிச்சி: தீபாவளி விடுமுறை முடிந்து பணி நிமித்தமாக சென்னை, சேலம், கோயம்புத்துார் உள்ளிட்ட பெருநகரங்களுக்கு புறப்பட்ட பயணிகள் கூட்டத்தால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது. தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. நேற்று அரசு விடுமுறை அளித்திருந்தது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி கொண்டாட சென்னை, கோயம்புத்துார், சேலம் உட்பட பல்வேறு நகரங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள் பணி செய்யும் ஊருக்கு புறப்பட்டனர். இதனால், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை, சேலம், பெங்களுரூ உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பயணிகள் முண்டியடித்து பஸ்சில் ஏறி இடம்பிடித்தனர். பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமானதால், ஏராளமான பயணிகள் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு குவிந்தனர். பணி மனையில் இருந்து பஸ் வெளியே வரும்போதே, பஸ்சில் ஏறி இடம் பிடித்து நெடுந்துார ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னை மார்கத்திற்கு தினசரி 50 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 30 அரசு பஸ்கள் மற்றும் 15 தனியார் பஸ்கள் அரசு சார்பில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை