கல்வராயன்மலையில் கோடை விழா நடத்துவது எப்போது? நலத்திட்ட உதவி கிடைக்காமல் மக்கள் தவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையில், இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கல்வராயன்மலை உள்ளது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில், 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, விறகு வெட்டுதல், தேன் எடுத்தல், கடுக்காய் சேகரித்தல் உள்ளிட்ட தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்பம் நடத்தி வருகின்றனர். வேலைவாய்ப்பின்மை
கல்வராயன்மலை பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. இதனால் பெரும்பாலானோர் கேரளா, கர்நாடகா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி தேயிலை தோட்டம், மரம் வெட்டுதல், செங்கல் சூளைகளில் கூலி வேலை செய்து வருகின்றனர். பெரிய அளவிலான வருவாய் இல்லாததால் கல்வராயன்மலை மக்களின் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. கோடை விழா
இந்த மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இவ்விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைத்து, மலைவாழ் மக்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறுவர். தகுதியுள்ள பயனாளிகள் அரசு திட்டங்களை பெற்று பயனடைவர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். மக்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நிறுத்தம்
கோடை விழாவை கண்டு களிப்பதற்காக விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கல்வராயன்மலைக்கு வருவர். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கோடை விழா நிறுத்தப்பட்டது. நடவடிக்கை தேவை
'கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடைபெறாமல் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில், கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவான நிலையில், இதுவரை கோடைவிழா நடத்தப்படவில்லை. இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை. அதனால் நடப்பாண்டிலாவது கல்வராயன்மலையில் கோடை விழா நடத்த அரசு முன் வரவேண்டும், என கல்வராயன் மலை பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.