பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.- இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பாண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க இம்மாதம் 30ம் தேதி கடைசி நாள் ஆகும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள் அக்டோபர் 15 ஆகும். கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarships.gov.in) நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்ட்டல் என்ற இணைப்பில் சென்று 'ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்' செய்து நடப்பாண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பிக்க வேண்டும். நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் தங்களது மொபைல் எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளீடு செய்தால் 'ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்' எண், 'பாஸ்வேர்ட்' எண்ணை பயன்படுத்தி நடப்பாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து புதியதாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.