காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது 5 வயது மகன் நிர்மல்ராஜ் நேற்று, வீட்டின் பின்புறம் விளையாடி உள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த தெருநாய், சிறுவனின் முகத்தை கடித்துக் குதறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நாயை துரத்த முயற்சி செய்துள்ளனர்.அப்போது, பாலாஜியின் கை மற்றும் காலிலும் நாய் கடித்துள்ளது. பின், ஒருவழியாக நாயை விரட்டிவிட்டு, குழந்தையை மீட்ட பாலாஜி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிறுவனை நாய் கடித்த சம்பவம், கணபதிபுரத்தில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவுமையத்தில் நாய்கள் தொல்லை
சென்னை, அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ, ஐ.சி.எப்.,பில், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படுகிறது.இங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய, காலை 7:30 முதல் மாலை 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் வருகின்றனர். ஐ.சி.எப்., ரயில்வே இடத்தில் செயல்படும் இந்த மையத்தில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த மையத்தில் நிறைய தெருநாய்கள், காலை முதல் இரவு வரை சுற்றி வருகின்றன. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணியர், அச்சத்துடன் செல்கின்றனர். சில நேரங்களில், நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதால், பயணியர் பீதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.