| ADDED : ஜூன் 10, 2024 04:50 AM
குன்றத்துார் : சுங்குவார்சத்திரம் அருகே கண்ணுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சியாமளா, 22. அரசு பணியில் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சியாமளா, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு நீண்ட நாட்களாக படித்து வந்தார்.சியாமளாவுக்கு கதிரேசன் என்பவருடன் நேற்று காலை 7:30 மணி அளவில், சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு தமிழகம் முழுதும் நடந்தது. சியாமளா திருமணம் நடந்து முடிந்த கையோடு, குன்றத்துார் அருகே புதுப்பேடு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் திருமண கோலத்தில் சென்று தேர்வு எழுதினார். அவர் தேர்வு எழுதி முடிக்கும் வரை, அவரது கணவர் கதிரேசன் வெளியே காத்திருந்து, மனைவியை அழைத்துச் சென்றார்.