காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி பிரதமருக்கு மனு அனுப்பி உள்ளார்.மனு விபரம்:காஞ்சிபுரம் உலக பிரசித்தி பெற்ற கோவில் நகரமாகவும், பட்டு பாரம்பரிய நகரமாகவும் விளங்குவதால், தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து காஞ்சிபுரத்திற்கு போதுமான ரயில் வசதி இல்லை.இதனால், காஞ்சிபுரம் வரும் சுற்றுலாப் பயணியர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி அந்தஸ்து பெற்ற காஞ்சிபுரம் வழியாக, தினசரி விரைவு மற்றும் அதி விரைவு ரயில் இயக்கப்படாமல் உள்ளது. திருச்சி, மதுரை, தஞ்சாவூர், தென்காசி, காரைக்குடி போன்ற நகரங்களுக்கு தினசரி பயணியர் ரயில் சேவை இல்லை.இதனால், சுற்றுலாப் பயணியர் மட்டுமின்றி, காஞ்சிபுரம் மக்களும், ஸ்ரீபெரும்புதுார், செய்யாறு போன்ற சிப்காட்டில் பணிபுரிவோர் தங்களது சொந்த ஊருக்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, காலை 11:20 மணியில் இருந்து, மாலை 5:50 மணி வரை சென்னை புறநகர் ரயில் சேவை இல்லை. எனவே, காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கடற்கரைக்கு, 10:30 மணி, மதியம் 1:30 மணி, மாலை 3:30 மணி, மாலை 5:00 மணிக்கு புதிய புறநகர் ரயில் சேவை துவக்க வேண்டும்.கொரோனாவின்போது நிறுத்தப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அரக்கோணம், பேசின் பிரிட்ஜ் வழியாக புதிய புறநகர் ரயில் இயக்க வேண்டும்.காஞ்சிபுரத்தில் இருந்து, மதுரைக்கு வந்தே பாரத் ரயில் சேவை, கோவைக்கும் ரயில் இயக்குவதோடு, அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு, சேலம், ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் ரயிலையும், செங்கல்பட்டில் இருந்து காச்சிக்குடாவுக்கு இயக்கப்படும் ரயிலை, காஞ்சிபுரத்தில் இருந்து இயக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.