கீவளூரில் கிடைமட்ட உறிஞ்சு குழி வீண்
கீவளூர்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கீவளூர் ஊராட்சியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள குளத்தில் கலந்து மாசு ஏற்படுத்தியது.கழிவுநீரை துாய்மைப்படுத்த 1.35 லட்சம் ரூபாய் மதிப்பில் கிடைமட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டது. இதில், ஜல்லி கற்கள், மரக்கறி, மணல் என அடுக்கடுக்கான இயற்கையான நீர் வடிப்பான்கள் உள்ளன.இதில், ஒருபுறம் புகுந்து மறுபுறம் வெளியேறும் நீர் வடிகட்டி துாய்மைப்படுத்தப்படும். வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீரை கால்வாய் வாயிலாக இந்த உறிஞ்சு குழியில் இணைத்தனர்.இதனால், கழிவுநீர் துாய்மைப்படுத்தப்பட்டு குளத்துக்கு சென்றது. தற்போது இந்த உறிஞ்சு குழி பராமரிப்பின்றி புதர்மண்டியுள்ளது. கழிவுநீர் உறிஞ்சு குழி வழியாக செல்லாமல் அதன் வெளிப்புறம் செல்கிறது.இதனால், இந்த உறிஞ்சு குழி கட்டியும் பயனில்லாமல் உள்ளது. இதை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.