உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.76 லட்சம்

காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.76 லட்சம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும்பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது.அதன்படி, கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள் கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று, திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.இதில், 76 லட்சத்து 4,234 ரூபாய் ரொக்கமும், 385 கிராம் தங்கமும், 645 கிராம் வெள்ளியும், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை, கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

குமரகோட்டம் வசூல் ரூ.22 லட்சம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, திறந்து எண்ணப்படுகிறது.அதன்படி, ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் கேசவன், ஸ்ரீபெரும்புதுார் சரக ஆய்வர் ரம்யா ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ஆறு உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள், தன்னார்வலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் வாயிலாக உண்டியலில் இருந்த காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இதில், 22 லட்சத்து 74,435 ரூபாய் ரொக்கமும், 63 கிராம் தங்கம், 1,027 கிராம் வெள்ளி என, கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !