உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்

காஞ்சியில் 3 ஆண்டுகளாக தீராத பிரச்னைகள்... சரமாரி குற்றச்சாட்டு: கவுன்சிலர்களுக்கு மேயர் தன்னிலை விளக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியின் மேயர் மகாலட்சுமி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தன. நகருக்கு தேவையான வளரச்சி திட்டங்கள் மேற்கொண்டு வருவதாக மேயர் மகாலட்சுமி தெரிவிக்கும் நிலையில், பல பிரச்னைகளுக்கு தீர்வே கிடைக்கவில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல், மார்ச் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்ற 9வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மகாலட்சுமியை, மேயராக தி.மு.க., மேலிடம் அறிவித்தது. இவரது கணவர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி நிர்வாகி என்பதாலும், மகாலட்சுமி பெயர் பரிசீலனை செய்யப்பட்டது.கடந்த 2022, மார்ச் 4ம் தேதி, அவர் மேயராக பதவி ஏற்றார். பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயரான இவருடைய நிர்வாகத்தின் கீழ், மூன்று ஆண்டுகளில் நகரின் வளர்ச்சி அதிகரித்துள்ளதா என நகரவாசிகளும், கவுன்சிலர்களும் மதிப்பிடுகின்றனர். கவுன்சிலர்கள் சிலர் மேயருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு நிலையிலும் தற்போதும் இருக்கின்றனர்.ஆன்மிகம் மற்றும் பட்டு நகரான காஞ்சிபுரம் நகருக்கு தேவையான வளர்ச்சி திட்டம் பல நிறைவேற்ற வேண்டிய தேவை இருந்த நிலையில், மூன்று ஆண்டுகளில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.ஆனால், மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக்கூடிய சில அடிப்படை பணிகள்கூட மேற்கொள்ளப்படாதது நகரவாசிகள் கடுமையாக பாதிக்கின்றனர். உதாரணமாக, நகரின் பல சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இன்று வரை அந்த சாலைகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் இல்லை.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த ஊர் என்பதால், தி.மு.க., அரசுக்கு காஞ்சிபுரம் நகர் மீதான கவனம் உள்ளது. இதனால், மார்க்கெட், எல்.இ.டி., விளக்குகள், அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் மாநகராட்சியில் போதிய வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை எனவும், பல பணிகள் அரைகுறையாகவும், நகர் முழுதும் இன்று வரை பாதாள சாக்கடை பிரச்னையை தீர்க்கவே முடியவில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தரப்பில் கூறியதாவது:காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்ந்து, மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், நிர்வாக ரீதியில் மாநகராட்சிக்கான தரத்திற்கு இன்னும் வரவில்லை. மூன்று ஆண்டுகளில் கவுன்சிலர்களின் கோரிக்கை மனுக்களுக்கு போதிய மதிப்பு அளிக்கவில்லை.பல வார்டுகளில் வளர்ச்சி திட்டங்கள் செய்யவே இல்லை. முறைகேடான குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு போன்றவை காண முடிகிறது.எங்களின் கோரிக்கையை அதிகாரிகளிடம் சொல்லியும் போதிய நடவடிக்கை இல்லாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.கழிவுநீர் அடைப்பு நீக்க போதிய வாகனம் இல்லாததால், தெருக்களில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை தீரவே இல்லை. குப்பை அகற்றும் பணியும் சரியாக நடப்பதில்லை. கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கும், வார்டு பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.மேயர் மகாலட்சுமி கூறியதாவது:மூன்று ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக, ஓரிக்கை, செவிலிமேடு, நத்தப்பேட்டை போன்ற இடங்களுக்கு, 350 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும், நகர் முழுதும் 350 கோடியில் குடிநீர் திட்ட பணிகளும் கொண்டு வந்துள்ளோம்.சாலை சீரைமைப்பு, கட்டடங்கள் கட்டியது, பாலம் கட்டியது, மாநகராட்சிக்கு புதிய கட்டடம், மார்க்கெட்டுக்கு புதிய கட்டடம் என, பல திட்டங்கள் செய்துள்ளோம்.என் பதவி முடியும் முன்பாக, துவங்கிய நடைபெறும் திட்டங்கள் அனைத்தும் அடுத்த இரு ஆண்டுகளில் முடித்து விடுவோம். கடந்தாண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் பிரச்னையை கவுன்சிலர்கள் எழுப்பியதால், ஒராண்டு பல வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுவிட்டன. கூட்டமே நடத்த முடியாமல் போனது. கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படுகின்றன.ஒவ்வொரு வார்டுக்கும், 10 லட்ச ரூபாய் அளவிலான பிரச்னைகளே உள்ளன. அதை சரி செய்து கொடுக்க அதிகாரிகளிடம் பல முறை கேட்டு விட்டேன்.அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை. கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி விட்டேன்.நகரில் 350 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் முடிந்த உடன், அனைத்து சாலைகளும் புதியதாக அமைக்கப்படும். ஏற்கனவே செயல்படும் பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க, அமைச்சரிடம் நிதி கேட்டுள்ளோம்.வ்வாறு அவர் கூறினார்.

மூன்று ஆண்டுகளில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் பற்றி மேயர் மகாலட்சுமி கூறியதாவது:

* ரூ.10 கோடியில் மாநகராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது* ரூ.7 கோடியில் ராஜாஜி மார்க்கெட் புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது* ரூ.4.5 கோடியில் நேரு மார்க்கெட் கட்டட பணிகள் நடக்கின்றன* ரூ.40 கோடியில் மஞ்சள் நீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடக்கின்றன* ரூ.700 கோடியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடக்கின்றன* ரூ.8.7 கோடியில் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் கட்டும் பணிகள் நடக்கின்றன* ரூ.12 கோடியில் 12,000 எல்.இ.டி.,விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன* 4 மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன* வேகவதி ஆறு குறுக்கே இரு இடங்களில் பாலங்கள கட்டும் பணி நடக்கின்றன* கழிவுநீர் அடைப்பு நீக்கும் சூப்பர் சக்கர் வாகனம் வாங்கியுள்ளோம்* குஜராத்திலிருந்து இரண்டு ஜெட் ராடிங் வாகனங்கள் வர உள்ளன* ரூ.2 கோடியில் நாகலுத்து மேடு பகுதியில் நவீன தகன மேடை அமைக்கிறோம்* 10 இடங்களில் நகர்நல மையங்கள் கட்டப்பட்டுள்ளன* சாலை, பள்ளி, நீர்நிலை, பூங்கா போன்றவைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி பல பணிகள் செய்துள்ளோம்-.--மூன்று ஆண்டுகளில் மேயர் தலைமையிலான வளர்ச்சி திட்டங்கள் திருப்தியாக இல்லை என கவுன்சிலர்கள் கூறியதாவது* காஞ்சியில் 5 நகர்நல மையங்கள் கட்டி முடித்து திறக்கப்படவே இல்லை* நகர் முழுதும் சாலைகளின் நிலை மோசமான நிலையில் உள்ளன* நகர் முழுதும் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறாக ஓடுகிறது; அவற்றை சரிசெய்ய நடவடிக்கை இல்லை* அண்ணா நுாற்றாண்டு நினைவு பூங்கா உள்ளிட்ட ஏராளமான பூங்காக்கள் நிலை பராமரிப்பு இன்றி உள்ளன* மாகராட்சியாக தரம் உயர்ந்து 3 ஆண்டுகள் ஆன போதும் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன* புதிதாக அமைக்கப்பட்ட எல்.இ.டி.,விளக்குகள் சரிவர எரிவதில்லை* குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் மையங்கள் செயல்படவில்லை* குப்பை அகற்ற டெண்டர் எடுத்த நிறுவனம் போதிய வாகனங்கள், ஊழியர்களை சரிவர நியமிக்கவில்லை* சீனிவாசன் மாநகராட்சி பள்ளி வளாகம் இன்று வரை சீரமைக்கப்படவில்லை* பேருந்து நிலையம் பராமரிப்பு படுமோசமாக உள்ளது* சாலையோர பெட்டி கடைகள் டெண்டர் விடாமல், வியாபாரிகளுக்கு வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAMAKRISHNAN NATESAN
மார் 05, 2025 14:21

மூன்று ஆண்டுகளாகியும் மாநகராட்சியில் போதிய வளர்ச்சி திட்டங்கள் நடைபெறவில்லை எனவும், பல பணிகள் அரைகுறையாகவும், நகர் முழுதும் இன்று வரை பாதாள சாக்கடை பிரச்னையை தீர்க்கவே முடியவில்லை என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் ......


புதிய வீடியோ