| ADDED : ஜூலை 21, 2024 07:36 AM
குன்றத்துார்: குன்றத்துார் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்த ஆலோசனை கூட்டம், குன்றத்துார் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், தாம்பரம் காவல் ஆணையரகம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, வருவாய் துறை, பொதுப்பணித் துறை, ஹிந்து அறநிலையத்துறை உள்ளிட்ட, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், குன்றத்துாரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்களை நகருக்குள் வருவதை தவிர்த்து, வெளிவட்ட சாலையில் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.மேலும், நகருக்குள் வணிக கடைகளின் முன் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிப்பது, சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, குன்றத்துார் மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு செல்லும் மலை பாதையை இருவழிசாலையாக விரிவாக்கம் செய்வது உட்பட, குன்றத்துார் நகரின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.