கழிப்பறை கட்டி 3 மாதமாச்சு திறப்பு விழா காண்பது எப்போது?
வையாவூர்:வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகில், அப்பகுதிமக்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து செல்வோரின் வசதிக்காக, கழிப்பறை கட்ட திட்டமிடப்பட்டது.அதன்படி, ‛ஸ்வச் பாரத் மிஷன் கிராமின்' 2023 - -24ம் நிதியாண்டில், 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 3.50 லட்சம் ரூபாய் செலவில், நான்கு கழிப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.கட்டுமான பணி நிறைவடைந்து மூன்று மாதத்திற்கு மேலாகியும், கழிப்பறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், கட்டடமும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, வையாவூரில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.