காஞ்சி ரவுடி வசூல்ராஜா கொலை வழக்கு 10 பேர் கைது: 4 பேருக்கு மாவுக்கட்டு 5 கல்லுாரி மாணவர்களுக்கும் தொடர்பு
காஞ்சிபுரம் காஞ்சிபுரம், மாமல்லன் நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற வசூல்ராஜா, 38. இவர் மீது, கொலை வழக்கு உட்பட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 'ஏ பிளஸ்' ரவுடியாக வலம் வந்தார்.கடந்த 11ம் தேதி பகல் 12:00 மணிக்கு, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர், அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில் நிலை தடுமாறி விழுந்த வசூல்ராஜாவை, கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.இது குறித்து விசாரித்த காஞ்சி தாலுகா போலீசார், திருமால்பூர் ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த கொலையாளிகள் பரத், 20, சிவா, 19, திலீப்குமார், 19, சூர்யா, 19, சுரேஷ், 21, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களில், பரத், சிவா, திலீப்குமார் ஆகியோர், தப்பியோட முயன்றபோது கீழே விழுந்ததில், கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.மேலும், வாலாஜாபாத் வெண்குடி அருகே பதுங்கியிருந்த ஜாகீர் உசேன், 25, சுல்தான், 32, ஆகியோரை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்று தவறி விழுந்த ஜாகீர் உசேனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.சுல்தானை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இக்கொலையில் கல்லுாரி மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது.கொலைக்கான காரணம் குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டவர்களில், திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான், 32. இவரது அண்ணன் நிவாஸ்கான் என்பவரை, 2018ல் வசூல்ராஜாவின் கூட்டாளிகள் கொலை செய்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில், வசூல்ராஜாவை கொலை செய்ய சுல்தான் திட்டமிட்டுள்ளார்.அப்போது, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் சுல்தானின் கூட்டாளிகளான கல்லுாரி மாணவர்களும், வசூல்ராஜாவை தீர்த்துக்கட்ட தயாராகினர்.அந்த வகையில், சிவா, திலீப், சூர்யா, மோகனசுந்தரம், மணிமாறன் என, ஐந்து கல்லுாரி மாணவர்கள், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.கூடுவாஞ்சேரியில் உள்ள அசோக் என்பவர் கையெறி குண்டு தயாரித்து கொடுத்துள்ளார். அவர், ஐந்து குண்டுகள் தயாரித்து கொடுத்ததில், மூன்று குண்டுகளை வீசி, இளைஞர்கள் பயிற்சி எடுத்த பின், மீதமுள்ள இரண்டு குண்டுகள் வைத்து கொலை செய்துள்ளனர். அசோக்கை தேடி வருகிறோம்.கைதானவர்களிடம் இருந்து இரண்டு டூ - வீலர்கள், ஒன்பது கத்திகள், நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பிரபல ரவுடி பொய்யாக்குளம் தியாகுக்கும், இந்த வழக்கில் சம்பந்தம் இருக்க முகாந்திரம் இருப்பதால், அவரையும் இவ்வழக்கில் சேர்த்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த வழக்கில், இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடி வருகின்றனர்.கை உடைந்த நான்கு பேருக்கும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் போலீசார் சிகிச்சைக்கு சேர்த்த போலீசார், நேற்று நீதிமன்ற காவலில் 10 பேரையும் வேலுார் சிறையில் அடைத்தனர்.