தென்னேரி சுற்றுவட்டாரத்தில் 3,000 ஏக்கர் நெற்பயிர் சாகுபடி
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 5,345 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.இந்த ஏரி நீர் பாசனத்தின் வாயிலாக தென்னேரி, தென்னேரி அகரம், மஞ்சமேடு, விளாகம், அயிமிச்சேரி, ஆம்பாக்கம், வாரணவாசி, சின்ன மதுரபாக்கம், கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், திருவங்கரணை உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 5,858 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன.பருவ மழைக்கு ஏரி நிரம்புவதற்கு முன்னதாகவே, ஏற்கனவே ஏரியில் இருந்த தண்ணீர், பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. இதனால், விவசாய நிலங்களை பதப்படுத்துதல், நாற்றங்கால் ஏற்படுத்துதல், நெல் விதை பதியம் செய்தல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன், தென்னனேரி ஏரி முழுமையாக நிரம்பியது. தென்னேரி சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில், சில நாட்களாக உழவு மற்றும் நெல் நடவு பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.தென்னேரி ஏரி நீர் பாசனம் வாயிலாக, சம்பா பின்பட்ட சாகுபடிக்கு, 3,000 ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளதாக, வாலாஜாபாத் வட்டார வேளாண் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.