ஒரகடத்தில் வாலிபரிடம் மொபைல் பறித்த 4 பேர் கைது
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே நடந்து சென்ற வடமாநில வாலிபரிடம், 'பல்சர்' பைக்கில் வந்து மொபைல் போன் பறித்த நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அசாருதின்கான், 20; ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் உள்ள, 'தாபா' உணவகத்தில் கிளீனராக உள்ளார். இவர், 17ம் தேதி ஒரகடம் சென்று விட்டு, இரவு 10:00 மணிக்கு பண்ருட்டிக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், பண்ருட்டி அருகே உள்ள பி.எஸ்.பி., தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, 'பல்சர்' பைக்கில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர், அசாருதின்கானை மடக்கி, அவரிடமிருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, ஒரகடம் போலீசில் அசாருதின்கான் புகார் அளித்ததை அடுத்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட, வாலாஜாபாத்தைச் சேர்ந்த லோக்கேஷ், 23, நாகராஜ், 22, வினோத், 18, ராஜா, 19, ஆகிய நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.