பெரியாநத்தத்தில் புதிதாக நெற்கதிர் அடிக்கும் களம்
பெரியாநத்தம்: காலுார் ஊராட்சி, பெரியாநத்தம் கிராமத்தில், 9.20 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம் இரு வாரத்தில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. காலுார் ஊராட்சி, பெரியாநத்தம் கிராம விவசாயிகள், கதிர் அடிக்கும் களம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 2025 - 26ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9.20 லட்சம் ரூபாய் செலவில், ராஜாங்குளம் அருகில் புதிதாக கதிர் அடிக்கும் களம் கட்டப்பட்டுள்ளது. இதில், ஷெட் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி முடிந்ததும், இரு வாரத்தில், கதிர் அடிக்கும் களம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.