சாலையோர டாஸ்மாக் கடையால் வாலாஜாபாதில் விபத்து அபாயம்
வாலாஜாபாத்:வாலாஜாபாதில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் சாலையில், வாலாஜாபாத் பாலாற்றங்கரையொட்டி பெட்ரோல் பங்க் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்குகிறது.இந்த கடை அருகாமையில் துரித உணவகமும் செயல்படுகிறது. இதனால், டாஸ்மாக் கடை மட்டுமின்றி, உணவகத்திற்கும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் சாலையின் இருபுறத்தையும் கடந்து செல்வதில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இதே சாலை பகுதியில், தற்போது இயங்கும் டாஸ்மாக் கடை எதிரே கடந்த ஆண்டுகளிலும் அரசு மதுக்கடை செயல்படுத்தப்பட்டது.இதனால், இச்சாலை பகுதியில் விபத்துகள் அதிகம் ஏற்படுவதால், அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி நடவடிக்கையின் பேரில், இங்கிருந்த மதுபானக்கடை அகற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், தற்போது மீண்டும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், மதியம் 12:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை வாகனங்கள் வரத்து அதிகரித்து விபத்துகளும் அதிகரித்து வருகிறது.அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக இச்சாலையோர டாஸ்மாக் கடையை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.