உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அங்கன்வாடி மைய இடம் ஆக்கிரமிப்பு மீட்க அத்திவாக்கம் மக்கள் வலியுறுத்தல்

அங்கன்வாடி மைய இடம் ஆக்கிரமிப்பு மீட்க அத்திவாக்கம் மக்கள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: அத்திவாக்கம் கிராமத்தில், தனிநபர் ஆக்கிரமித்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டு மென, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்டது அத்திவாக்கம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு சொந்தமான இடம், மையத்திற்கு அருகிலேயே உள்ளது. இந்த இடத்தை, சில ஆண்டுகளுக்கு முன் தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, வீடு கட்ட துவங்கியுள்ளார். கிராம ஊராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை என யாரும் தடுக்காததால், ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டி, பல ஆண்டுகளாக வசித்து வருகிறார். இதனால், எதிர்காலத்தில் அங்கன்வாடி மையத்தை விரிவாக்கம் செய்து கட்டடம் கட்ட இடமில்லாத சூழல் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு செய்து உள்ள இடத்தை மீட்க, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல முறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை என, அத்திவாக்கம் கிராமத்தினர் தெரிவித்து உள்ளனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் விசாரிப்பதாக தெரிவித்தனர். ஆனால், ஆக்கிரமிப்பு இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை இல்லை. எனவே, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை