ஏரியில் விழுந்த கல்லுாரி மாணவர் சடலமாக மீட்பு
காஞ்சிபுரம்:ஏரியில் மூழ்கிய கல்லுாரி மாணவர் சடலமாக மீட்கப்பட்டார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லக்சன், 21. இவர், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். காஞ்சிபுரம் அருகே உள்ள நத்தப்பேட்டை ஏரிக்கு தனது நண்பர்கள் இருவர் என, மூன்று பேர் நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர். அப்போது, லக்சன் செருப்பு ஏரி தண்ணீரில் விழுந்துள்ளது.அதை எடுக்க இறங்கியபோது, தண்ணீரில் மூழ்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் லக்சன் வெளியே வராததால், நண்பர்கள் அங்குள்ள மீன் பிடிப்போரிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் தண்ணீரில் தேடியுள்ளனர். கிடைக்காததால், தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை என பல மணி நேரம் தேடினர். நீண்ட நேரம் தேடலுக்கு பின், வாலிபர் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.இதுகுறித்து, காஞ்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடலை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.