சீனியர் சாப்ட் பால் போட்டியில் சென்னை ரன்னர் அப்
சென்னை, தமிழ்நாடு சாப்ட் பால் சங்கத்தின் ஆதரவுடன், சென்னை மாவட்ட சாப்ட் பால் சங்கம் சார்பில், மாநில அளவிலான சாப்ட் பால் போட்டி, சேலையூரில் உள்ள பாரத் கல்லுாரியில், கடந்த 7ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.இப்போட்டியில், சென்னை, திருவள்ளூர், சேலம், திருச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இருபாலரிலும் தலா 15 அணிகள் பங்கேற்றன.அனைத்து போட்டிகளின் முடிவில், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், சேலம் மற்றும் சென்னை மாவட்ட அணிகள் மோதின.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 5 - 3 என்ற செட் கணக்கில், சேலம் அணி முதலிடத்தையும், சென்னை இரண்டாமிடத்தையும் வென்றன. மூன்றாம் இடத்தை, திருச்சி மாவட்டம் கைப்பற்றியது.பெண்களில், ராணிப்பேட்டை, திருச்சி மற்றும் சேலம் மாவட்ட அணிகள் முறையே, முதல் மூன்று இடங்களை கைப்பற்றி அசத்தின.