வாகனங்களை கழுவுவதால் மாசடையும் செரப்பனஞ்சேரி ஏரி
ஸ்ரீபெரும்புதுார்;செரப்பனஞ்சேரி ஏரியில் லாரி, பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களை கழுவுவதால், அதிலிருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளால் ஏரி நீர் மாசடைந்து வருகின்றன. குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அத்துடன், அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில், லாரி, பொக்லைன் இயந்திரம், தனியார் தொழிற்சாலை வேன் உள்ளிட்டவைகளை தினமும் கொண்டு வந்து கழுவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாகனங்கள் கழுவுவதால், வாகனங்களில் உள்ள எண்ணெய் கழிவுகள் ஏரிநீரில் கலக்கின்றன. இதனால், ஏரிநீர் மாசடைந்து வருவதால், நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை அதிகரித்து உள்ளது. மேலும், ஏரியில் உள்ள மீன்களும் அடிக்கடி செத்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, செரப்பனஞ்சேரி ஏரியில் வாகனங்கள் கழுவுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.