வேகத்தடை, எச்சரிக்கை பலகையின்றி ஆபத்தான சீட்டணஞ்சேரி சாலை வளைவு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கரும்பாக்கத்தில் இருந்து, சீட்டணஞ்சேரி செல்லும் இணைப்பு சாலை உள்ளது. சீட்டணஞ்சேரி, குமஞ்சேரி, பினாயூர், சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த சாலையில், சீட்டணஞ்சேரி அருகே அடுத்தடுத்த இரு இடங்களில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. சாலையின் இருபுறமும் கரும்பு தோட்டங்கள் உள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.மேலும், மின்வசதி இல்லாத இச்சாலையில், இரவு நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.எனவே, விபத்தை தடுக்கும் பொருட்டு இச்சாலை வளைவுகளில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க இப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.