காஞ்சி - -தி.நகர் ஏசி பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை தி.நகருக்கு, கோடைக்காலத்தில், 'ஏசி' பேருந்து இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், எட்டு ஆண்டுகளுக்கு முன் தடம் எண்576 என்ற, 'ஏசி' பேருந்து, காஞ்சிபுரம் -- சென்னை, தி .நகர் இடையே இயக்கப்பட்டது. கோடைக்காலத்தில், பயணியரிடையே 'ஏசி' பேருந்துக்கு வரவேற்பு அதிகரித்தது.இந்நிலையில், 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது காஞ்சிபுரம் -- சென்னை, தி.நகர் இடையே இயக்கப்பட்டு வந்த, 'ஏசி' பேருந்து சேவையை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நிறுத்திவிட்டது.அதன்பின், மீண்டும் 'ஏசி' பேருந்து சேவையை துவக்கவில்லை. தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும், கத்திரி வெயில் துவங்கி, வெயில் கொளுத்தி வருவதால், காஞ்சியில் இருந்து சென்னைக்கு சாதாரண பேருந்தில் சென்று வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, கொரோனா ஊரடங்கின்போது நிறுத்தப்பட்ட, காஞ்சிபுரம் -- சென்னை, தி.நகர் இயக்கப்பட்ட தடம் எண்576 என்ற, 'ஏசி' பேருந்தை மீண்டும் இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.