தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் சுவரில் மோதி டிரைவர் காயம்
மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள,'டைம்லர்' தொழிற்சாலையில் இருந்து, ஊழியர்களை ஏற்றிச் சென்ற, பி.ஆர்.ஆர்., டிராவல்ஸ் பேருந்து, நேற்று மாலை மறைமலை நகர் நோக்கி சென்றது.மறைமலை நகரில் ஊழியர்களை இறக்கிவிட்ட பின், சிங்கபெருமாள் கோவில் நோக்கி காலியாக, ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது.பேருந்தை ஏழுமலை, 38, என்பவர் ஓட்டினார்.மறைமலை நகர் 'போர்டு' கார் தொழிற்சாலை அருகே சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்தது. அதிவேகமாக சென்று, அணுகு சாலை தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு, போர்டு தொழிற்சாலையின் மதில் சுவர் மற்றும் அங்கிருந்த இரும்பு மின் கம்பத்தில் மோதி நின்றது.இதில், மதில் சுவர் உடைந்து விழுந்தது.இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை, தகவலின்படி வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, பொத்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.