5 சென்ட் பூங்கா இடத்தை மீட்க முடியாமல் அதிகாரிகள் திணறல் ஆளுங்கட்சியினர் தலையீடு காரணமா?
ஊரப்பாக்கம், ஊரப்பாக்கத்தில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள,'ஓ.எஸ்.ஆர்., இடத்தை மீட்க முடியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர். ஆளும் கட்சியினர் தலையீடே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன.லட்சத்திற்கும் மேற்பட்டோர் இங்கு வசிக்கின்றனர்.இங்குள்ள, 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகரில் வீட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்ட போது, பூங்கா அமைப்பதற்காக 34.5 சென்ட் இடம், ஓ.எஸ்.ஆர்., எனும், திறந்தவெளி ஒதுக்கீடு இடமாக ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.அதன் பின், இந்த இடத்தின் முகப்பு பகுதியில் உள்ள, 2,400 சதுர அடி பரப்பு இடம், போலி ஆவணங்கள் வாயிலாக, தனி நபர் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வீடும் கட்டப்பட்டது.இந்த ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத்தரும்படி, பகுதிவாசிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, ஆக்கிரமிப்பாளருக்கு கடந்த 2024 டிச., 19ம் தேதி, அந்த இடத்தை காலி செய்யும்படி, படிவம் 7 வழங்கப்பட்டது. பின், கடந்த ஜனவரி 3ம் தேதி, ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதாக, படிவம் 6ம் வழங்கப்பட்டது.ஆனாலும், ஆக்கிரமிப்பாளர் இதை கண்டுகொள்ளாமல், அந்த இடத்தை தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.இதையடுத்து, பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை மீட்டு நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க வேண்டுமென, ஊரப்பாக்கம் பகுதிவாசிகள் புகார் வலியுறுத்தி உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, வண்டலுார் வட்டாட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த, மூன்று முறை முயற்சி செய்தார். ஆனால், ஆளும் கட்சியினரின் தலையீட்டால், வட்டாட்சியரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அதுமட்டுமின்றி, கடந்த மாதம் அவர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார்.