காரணிமண்டபம் --- காஞ்சிபுரம் பஸ்சை மேல்பாக்கம் வழியாக இயக்க முடிவு
உத்திரமேரூர்: காரணிமண்டபத்தில் இருந்து, மேல்பாக்கம் வழியாக காஞ்சிபுரத்திற்கு பேருந்தை இயக்க போக்குவரத்து துறையினர் முடிவு செய்துள்ளனர். உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு உட்பட்டது, தடம் எண்: 34எ பேருந்து. இப்பேருந்து, காரணிமண்டபத்தில் இருந்து களியாம்பூண்டி, அனுமந்தண்டலம் வழியாக காஞ்சிபுரத்திற்கு தினமும் நான்கு நடை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்ல, 2 கி.மீ., நடந்து அனுமந்தண்டலம் சென்று, பேருந்து பிடித்து செல்கின்றனர். இதை தவிர்க்க, காரணி மண்டபம் பேருந்தை, மேல்பாக்கம் வழியாக காஞ்சிபுரத்திற்கு இயக்க, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, காரணி மண்டபம் பேருந்தை களியாம்பூண்டி, மேல்பாக்கம் வழியாக காஞ்சிபுரத்திற்கு இயக்க, அரசு போக்கு வரத்து துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, உத்திர மேரூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனை மேலாளர் நாராயணன் கூறியதாவது: உத்தரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்குட்பட்ட தடம் எண்: 34எ பேருந்தை, மேல் பாக்கம் வழியாக காஞ்சிபுரத்திற்கு இயக்க உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில், இப்பேருந்தை மேல்பாக்கம் வழியாக இயக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.