வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்
ஸ்ரீபெரும்புதுார், ஜூலை 8-வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் அருள்பாளிக்கிறார்.இக்கோவிலில், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, கோவிலை புதிப்பித்து கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து, கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து சமய அறநிலைத் துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, திருகோவில் நிதி, உபயதாரர்கள் நிதி 1.50 கோடி ரூபாய் மதிப்பில், 2023ம் ஆண்டு, மார்ச் மாதம் புனரமைப்பு பணிகள் துவங்கின.உற்சவர் சன்னிதி, வினாயகர் சன்னிதி, சண்முகர் சன்னிதி, திரிபுரசுந்தரி அம்மன் சன்னிதி, பைரவர் சன்னிதி, இடும்பன் சன்னிதி, கடம்பன் சன்னதிகள் புனரமைத்தல்.பிரகாரத்தில் கருங்கல் தரைதளம் அமைத்தல், விமானங்கள், கோபுரங்கள் வண்ணம் தீட்டுதல், தளவரிசை பழுதுபார்த்தல், வடக்கு ராஜகோபுரம் கட்டுதல், மடப்பள்ளி கட்டுதல், தேர் கொட்டகை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதையடுத்து, கடந்த மே மாதம் 28ம் தேதி பந்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து மூலவர் சன்னதி திருபணிக்காக ஜூன் 6ம் தேதி யாக பூஜையுடன் பாலாலயம் செய்யப்பட்டது.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. 60 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 108 சிவாச்சாரியார்களும், 9 ஓதுவார்களும் யாகசாலை பூஜைகள் நடந்தன.இந்நிலையில், நேற்று காலை, யாக சாலையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, காலை 9:45 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.