கலங்கலில் மரங்கள் வளர்ந்ததால் ஏரிக்கரை உடையும் அபாயம்
எடையார்பாக்கம், மதுரமங்கலம் அடுத்த, எடையார்பாக்கம் கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரிநீரை பயன்படுத்தி, அக்கமாபுரம், எடையார்பாக்கம், மேலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 86க்கும் மேற்பட்ட விவசாயிகள், 750 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.வடகிழக்கு பருவ மழைக்கு ஏரி நிரம்பினால், அக்கமாபுரம் அருகே இருக்கும் ஏரி கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறும். இந்த கலங்கல் போதிய பராமரிப்பு இல்லாததால், நாணல் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.இதனால் மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது, உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேற முடியாமல், கரை உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது.எனவே, எடையார்பாக்கம் நீர்வளத் துறை ஏரி கலங்கலை சீரமைத்து உபரி நீர் வெளியேறும் வகையில் வழி வகை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆய்வு செய்து விட்டு இடையூறாக இருக்கும் மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.