உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலைகளை மூழ்கடித்த மழைநீர் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

சாலைகளை மூழ்கடித்த மழைநீர் சிரமத்தில் வாகன ஓட்டிகள்

உத்திரமேரூர்: நல்லுார் சாலையை மூழ்கடித்துள்ள மழை வெள்ளத்தால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி, புக்கத்துறை நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, நல்லுார் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நல்லுார் செல்லும் சாலையோரத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் ஆகியவை உள்ளது. இப்பகுதியில், மழைநீர் வடிந்து செல்ல போதிய கால்வாய் வசதி இல்லாமல் உள்ளது. மழை நேரங்களில் தேங்கும் தண்ணீரானது நெல்லுார் சாலையை மூழ்கடிக்கிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதேபோல, சாலவாக்கம் ஊராட்சியில் உள்ள வெள்ளாளர் தெருவில், வடிகால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தெருவில் தேங்கும் மழைநீர் வடிந்து செல்லாமல் அங்கேயே தேங்கி வருகிறது. வாலாஜாபாத் வாலாஜாபாதில் பெய்த கனமழையால், பல்வேறு தெருக்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழந்து அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தெருக்கள் தாழ்வான பகுதியாக உள்ளதாலும் சில தெருக்களில் மழைநீர் வடிகால்வாய் இல்லாததால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. அம்மாதிரியான நேரங்களில் தெரு வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், போஜக்காரத்தெரு, வீரராகவ சுபேதர் தெரு, கோபால் நாயுடு தெரு, வலம்புரி வினாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் உடனடியாக வெளியேற வழி இல்லாத நிலை உள்ளது. மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்கள் குறித்து பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து தெருக்களில் தேங்கும் மழைநீர் வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை