உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னை: சென்னையில் இருந்து இலங்கை நாட்டுக்கு, விமானம் வாயிலாக நட்சத்திர ஆமை மற்றும் பாம்புகளை மர்ம கும்பல் கடத்தி வருவது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழகத்தில், சென்னையை மையமாக வைத்து, போதை பொருட்கள் மற்றும் அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதற்கென தனியாக, 'சிண்டிகேட்' அமைத்து குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் அரியவகை உயிரினங்கள், சென்னை வழியாக இலங்கை நாட்டுக்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில், சென்னையைச் சேர்ந்த கும்பல் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, சுங்கத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரியவகை உயிரினங்கள் கடத்தலில், சென்னையைச் சேர்ந்த சில கும்பல்கள் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட சில வகை உயிரினங்களை நம் நாட்டில் வளர்க்கவும், இறக்குமதி செய்யவும், கடுமையான விதிமுறைகள் உள்ளன. ஆனால், சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வோர் வாயிலாக, சட்ட விரோதமாக உயிரினங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதில் குற்றத்தில் ஈடுபடுவோரை பிடித்தாலும், அடுத்தடுத்து புது ரூட்டில் கடத்தல் நடந்து வருகிறது. அதாவது, தாய்லாந்தில் இருந்து அரியவகை வன உயிரினங்கள், சென்னைக்கு கடத்தி வருகின்றனர். இங்கிருந்து வெளியே சென்றால், சுங்கத்துறை சோதனையில் சிக்கி விடுவோம் என பயந்து, 'ட்ரான்சிட்' முறையில் இலங்கைக்கு செல்கின்றனர். அங்கு, பாம்பு, ஆமை உள்ளிட்ட உயிரினங்களுக்கென தனி சந்தை உள்ளது. சென்னையில் கிடைக்கும் லாபத்தைவிட அங்கு, மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கிறது. இதேபோல், தமிழகத்தில் உள்ள நட்சத்திர ஆமைகளை, பெங்களூரு வழியாக இலங்கைக்கு கடத்தும் முறையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். கடத்தலில் ஈடுபடும் கும்பலை விரைந்து பிடித்துவிடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ