| ADDED : டிச 05, 2025 06:06 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் - பாப்பநல்லுார் இடையே அரசு பேருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் முறையாக இயக்காததால் போக்குவரத்திற்கு சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மதுராந்தகம் ஒன்றியம், பாப்பநல்லுாரில் இருந்து, நாஞ்சிபுரம், காரியமங்கலம் வழியாக தடம் எண்89ஏ அரசு பேருந்து உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டு வரை இயக்கப்படுகிறது. பாப்பநல்லுார் மற்றும் காவனுார் புதுச்சேரி கூட்டுச்சாலையை சுற்றி உள்ள கிராம மக்கள், இப்பேருந்து மூலம் பயணித்து, உத்திரமேரூர் மற்றும் செங்கல்பட்டுக்கு பல்வேறு பணிகள் காரணமாக சென்று வருகின்றனர். காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று வேளை இயக்கப்படும் இப்பேருந்து, சில மாதங்களாக சனிக்கிழமை சரி வர இயங்குவதில்லை எனவும், ஞாயிறுகளில் முழுதுமாக இயங்கவில்லை என கூறப்படுகிறது. ஞாயிறுகளில் தடம் எண்76 என்ற போர்டு மாற்றி, காஞ்சிபுரம் - பூந்தமல்லி இடையே இயக்குவதாகவும், இதனால் போக்குவரத்திற்கு தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தடத்திலான அரசு பேருந்து முறையாக இயக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதுகுறித்து, உத்திர மேரூர் போக்குவரத்து பனிமனை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 89ஏ., பேருந்து இயக்கம் துவக்கப்பட்டது. ஞாயிறுதோறும் காலை வேளையில் சரியாக இயக்கப்படுகிறது. மதியம் மற்றும் மாலை வேளையில் பயணிக்க ஒருவரும் வருவதில்லை. பள்ளிக்கும் அன்று விடுமுறை மற்றும் இது மகளிருக்கான விடியல் பேருந்தும் இல்லை என்பதால் போக்குவரத்திற்கு அதிக தேவை பகுதியில் அன்று இயக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.