பண்ருட்டி ஏரிக்கரையோரம் 15,000 பனை விதைகள் நடவு
காஞ்சிபுரம், : விதைகள் சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்பு சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட 59 நீர்நிலைகளை ஒட்டியுள்ள கரையோர பகுதியில், மூன்று லட்சம் பனை விதைகள் நடவு செய்துள்ளனர்.இதில், நான்காவது ஆண்டில் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து, நடவு செய்யும் துவக்க விழா, கடந்த 8ம் தேதி வயலக்காவூர் ஏரிக்கரையில் துவங்கியது. இதில், 10,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை ஒரே நாளில் நடவு செய்தனர்.இதன் தொடர்ச்சியாக, இரண்டாவது கட்ட களப்பணியாக வாலாஜாபாத் அடுத்த சேர்காடு ஏரிக்கரையில், கடந்த 15ம் தேதி, 5,000 பனை விதைகள் நடவு செய்தனர்.மூன்றாவது கட்ட களப்பணியாக, நேற்று முன்தினம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஏரிக்கரையில், 2 கி.மீ., நீளத்திற்கு பனை விதை நடவு செய்யும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆதி கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், என்.எல்.சி., ஓய்வுபெற்ற பொறியாளர்கள், ஒரகடம் தொழில் நகர அரிமா சங்கத்தினர், விதைகள் தன்னார்வ அமைப்பினர், தன்னார்வலர்கள் ஒருங்கி ணைந்து 15,000 பனை விதைகளை நடவு செய்தனர்.